வெள்ளி, 7 டிசம்பர், 2012

பாலச்சந்திரனை கொலை செய்தவர்...!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை(வயது 14) இலங்கை இராணுவத்தின் 53ஆவது படைப் பிரிவே சுட்டுக் கொன்றுள்ளதாக லங்கா நியூஸ் வெப் செய்தி வெளியிட்டுள்ளது.


கோதாபய ராஜபக்‌ஷவின் நேரடி ஆலோசனைக்கமைய 53ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக அன்று கடமையாற்றிய பிரிகேடியர் கமல் குணரத்னவின் பற்றாலியனே இந்தச் சிறுவனை சுட்டுக்கொன்றுள்ளதாகவும்,

2009ஆம் ஆண்டு மே 19ஆம் திகதி அதிகாலை 7.30 அளவில் பாலச்சந்திரன் பிரபாகரன் உள்ளிட்ட சிலர் நந்திக்கடல் களப்பில் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளனர். அதாவது, இராணுவத்தின் 4வது விஜயபா படைப்பிரிவின் முத்துபண்டாவின் தலைமையில் இருந்த 8 பேர் கொண்ட இராணுவப் படையணியிடம் இவர்கள் சரணடைந்ததாக அந்த இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவரது பிரத்தியே பாதுகாப்பு உறுப்பினர் இருவருடன் பாலச்சந்திரன் பிரபாகரன் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளார். இதன்போது லெப்டினன் கேணல் அலுவிகார அவரது 681வது பற்றாலியனின் கட்டளைத் தளபதியாக பணியாற்றிய லெப்டினன் கேணல் லலந்த கமமே ஊடாக, 53ஆவது படையணியில் அன்று மேஜர் ஜெனரல் பதவியிலிருந்த கமல் குணரத்னவிற்கு அறிவித்துள்ளார்.

கமல் குணரத்னவின் உத்தரவிற்கமைய பாலச்சந்திரன் உள்ளிட்ட குழுவினரை நந்திக்கடல் களப்பு பிரதேசத்திலிருந்து கமல் குணரத்னவிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கமல் குணரத்ன பாலச்சந்திரன் உள்ளிட்ட குழுவினரிடம் தனிப்பட்ட விசாரணைகளை நடத்தியுள்ளார். இதன்போது தனது தந்தையிடமிருந்து பிரிந்து பாதுகாப்புத் தரப்பினருடன் வந்ததாக பாலச்சந்திரன் கூறியுள்ளான்.

பாலச்சந்திரனிடம் பெறப்பட்டத் இராணுவத்தினரிடம் தகவல்களை கமல் குணரத்ன உடனடியாக கோத்தபாய ராஜபக்‌ஷவிற்கு தொலைபேசி ஊடாக அறிவித்ததும், இந்தத் தகவல்கள் அனைத்தையும் கோத்தபாய, தமிழினத் துரோகி கருணாவுக்கு அறிவித்துள்ளார்.

பாலச்சந்திரன் தலைவர் பிரபகாரனின் மகன் என்பதனால் எதிர்காலத்தில் விடுதலை புலிகளின் தலைவராக வரக்கூடும், சிறுவன் என்பதனால் நீதிமன்றத்தால் தண்டனைகள் கொடுக்கமுடியாத சாத்தியங்கள் இருப்பதாகவும், எனவே சிறுவனை கொன்றுவிடுவதே சரியான முடிவும் எனவும் கோத்தபாயவுக்கு, தமிழினத் துரோகி கருணா கூறியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்‌ஷ, மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை தொலைபேசியில் தொடர்புகொண்டு, உங்களின் தனிப்பட்ட மேற்பார்வையில் பாலச்சந்திரனை சுட்டுக் கொன்று, தடயங்களை அழித்துவிடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன் பிரித்தானியாவின் ”சனல் 4” தொலைக்காட்சியில் பாலச்சந்திரனின் கொலை தொடர்பாக பல தகவல்களை வெளியிடப்பட்டிருந்ததைப் பார்த்த இந்தப் படையணியில் இருந்த இராணுவ அதிகாரியொருவரே மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.

ஏனையவர்கள் செய்த தவறுகளுக்கு எல்லாம் என்னால் பொறுப்பு நிற்க முடியாது என்பதனால் இந்தத் தகவல்களை வெளியிடுவதாகவும் அந்த இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளதாக மேலும் அவ் இணையம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக